"வறட்சி நிவாரணம் கிடைக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் பெற்றுத் தர நடவடிக்கை'

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் பெற்றுத் தர நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட புளியம்பட்டி, மருதன்வாழ்வு, அக்கநாயக்கன்பட்டி, குலசேகரநல்லூர், எப்போதும்வென்றான் உள்ளிட்ட கிராமங்களுக்கு சனிக்கிழமை இரவு சென்ற புதிய தமிழகம் கட்சித் தலைவர் அந்தப் பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, அரசு அறிவித்துள்ளதுபடி வறட்சி குறித்து முறையான கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறதா? குத்தகைதாரர்களை கணக்கெடுப்பில் சேர்க்கிறார்களா வேளாண்மைதுறை மற்றும் வருவாய்துறையினர் முறையாக ஆய்வு மேற்கொள்கின்றனரா போன்ற கேள்விகளை விவசாயிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் விவசாயிகள் மத்தியில் அவர் பேசியதாவது:
பருவ மழை பொய்த்துவிட்டதால் விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டது. வேளாண்மைத் துறையினர் சேதம் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தவில்லை. அரசு நிர்ணயித்துள்ள தொகையும் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு முதல்வரிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளேன். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முறையாக அரசு நிவாரணத்தொகை வழங்க மறுத்தால் நீதிமன்றம் சென்று பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
அப்போது, புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர்அலி, செய்தி தொடர்பாளர் கப்பிகுளம் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் கடலையூர் சாலை வள்ளுவர் நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.
வறட்சியால் பாதித்த விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்த அவர் மனுக்களையும் பெற்றார். இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அன்புராஜ், ஒன்றியச் செயலர் வேல்முருகன், மாவட்ட வர்த்தக அணியைச் சேர்ந்த குழந்தைவேல், ஒன்றிய விவசாய அணிச் செயலர் பேச்சிமுத்து, முன்னாள் ஒன்றியச் செயலர் அதிகுமார், கயத்தாறு ஒன்றிய விவசாய அணியைச் சேர்ந்த காசி, ஒன்றிய இளைஞரணியைச் சேர்ந்த பேச்சிமுத்து உள்பட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com