ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயில் மூலவர் வைகுண்டபதி அவதார தினவிழாவை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது.
நவதிருப்பதி கோயில்களில் முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலின் மூலவர் வைகுண்டபதிக்கு தை மாதம் அனுச நட்சத்திர நாளில் அவதார தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு அவதார தினமான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 9.30 மணிக்கு பாலாபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 11 மணிக்கு உற்சவர் கள்ளபிரான் சுவாமி தாயார்கள் வைகுண்டநாயகி, சோரநாதநாயகி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் சயன குறட்டிற்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த சாத்துமுறை கோஷ்டி நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு மூலவர் வைகுண்டபதிக்கு உற்சவர் அணிந்துகொள்ளும் அனைத்து ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகளுடன் கூடிய வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவில் உற்சவர் கள்ளபிரான் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்தார்.
இதில், கோயில் நிர்வாக அதிகாரி கார்த்திக், ஆய்வாளர் ரவிச்சந்திரன், ஸ்தலத்தார்கள் ஸ்ரீனிவாசன், ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், உபயதாரர் வழக்குரைஞர் சந்திரசேகர், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் வீரபாண்டி, வழக்குரைஞர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.