தூத்துக்குடியில் சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த அப்துல் கபூர் மகன்கள் புகாரி (37), சலீம் (34) ஆகியோர் ராஜபாண்டிநகரில் இருந்தபோது கடந்த 22ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது ராஜபாண்டிநகரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் கை துண்டானது. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்த தென்பாகம் போலீஸார், ஆறுமுகத்திடம் மேற்கொண்ட விசாரணையில், கஞ்சா வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட மோதலில் சகோதரர்களை கொலை செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, ஆறுமுகம், அவரது நண்பர்களான மாரிச்செல்வம், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த சாலமோன் ஆகிய 3 பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்