ஆறுமுகனேரியில் ஆதியோகி சிவன் ரதத்திற்கு வரவேற்பு

ஆறுமுகனேரிக்கு வியாழக்கிழமை மாலை வந்த ஆதியோகி சிவன் ரதத்திற்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

ஆறுமுகனேரிக்கு வியாழக்கிழமை மாலை வந்த ஆதியோகி சிவன் ரதத்திற்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
 கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி மாலை உலகத்திலேயே அதிக உயரம் கொண்ட 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதன் மாதிரி உருவம் மூன்று ரதங்களில் கடந்த மாதம் புறப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது. இதில் ஒரு ரதம் கோவையிலிருந்து மதுரை, கன்னியாகுமரி வந்து அங்கிருந்து நாகர்கோவில், உவரி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் வழியாக வியாழக்கிழமை திருச்செந்தூர் வந்தடைந்தது. அங்கு நான்கு ரத வீதிகள் வழியே பவனி வந்து பின்னர் ஆறுமுகனேரி வந்தடைந்தது.
 ஆறுமுகனேரி விநாயகர் கோயில் தெருவில் உள்ள சைவ சித்தாந்த சங்கத்தின் முன்பு  ரதத்துக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயில் முன்பும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 நிகழ்ச்சியில் சைவ சித்தாந்த சங்கத் தலைவர் ஜெ.சங்கரலிங்கம், முன்னாள் தலைவர் சுடலை முத்து பிள்ளை, பக்த ஜன சபை செயலர் பி.கே.எஸ்.கந்தையா பிள்ளை, சே.கற்பக விநாயகம், ஆறுமுகனேரி அரிமா சங்கத் தலைவர் ஜெ.நடராஜன், எஸ்.ராமசுவாமி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
 ஏற்பாடுகளை ஈஷா யோகா தன்னார்வ தொண்டர் மு.ராமசுப்பிரமணியன் செய்திருந்தூர்.
 பின்னர் இந்த ரதம் ஆத்தூர், முக்காணி, பழையகாயல், முள்ளக்காடு, முத்தையாபுரம் வழியாக தூத்துக்குடி சென்றடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com