தூத்துக்குடி மாநகரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை சார்பில், மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட கடற்கரைச் சாலை, துறைமுகப் பகுதி, உப்பாற்று ஓடை, முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பகுதிகள், ஸ்டெர்லைட் குடியிருப்பு பகுதி, சி.வ. குளம் உள்ளிட்ட பல பகுதிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், வட்டாட்சியர் சங்கரநாராயணன், மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், உதவி ஆணையர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.