காயல்பட்டினத்தில் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

காயல்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியில் ஈடுபட்டனர்.

காயல்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. காயல்பட்டினத்தில் விசாலட்சுமி அம்மன் கோயில் தெரு, பூந்தோட்டம் மற்றும் லட்சுமிபுரம் பகுதிகளில் சுமார் மூன்றாயிரம் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதுதொடர்பாக பொதுமக்கள் காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியதைத் தொடர்ந்து, லாரி மூலம் இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்ததாம். ஆனால் அந்த தண்ணீர் பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குடங்களுடன் சாலை மறியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 250 பெண்கள் உள்பட 400 பேர் கலந்துகொண்டனர்.
நகராட்சி நிர்வாகத்தினரும், காவல் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுமென உறுதி கூறியதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com