தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால், மத்திய அரசு கட்டுமானப் பணியைத் தடுக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், வர்தா புயலால் பாதிக்கப்பட்டதற்கே நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழக அரசின் கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. சென்னையில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. சென்னையில் மீனவ மக்கள் மற்றும் தலித் இளைஞர்கள் மீது வீடு புகுந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தத் தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.