கோவில்பட்டியில் கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைக்கு சீல்
தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைக்கு கோட்டாட்சியர் திங்கள்கிழமை சீல் வைத்தார்.
கோவில்பட்டியில் உள்ளூர் கேபிள் டி.வி. ஆப்ரேட்டர் உரிமம் பெற்றுக் கொண்டு, அரசு சிக்னல் எடுத்துக் கொள்ளாமல் ஈபஏ மூலம் சிக்னல் வைத்து, அவர் மற்றும் 60 ஆப்ரேட்டர்களுக்கு கேபிள் இணைப்பு கொடுத்து கேபிள் டி.வி. நிறுவனத்தை நடத்தி வந்தாராம்.
இதனால் தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படுத்தியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் உத்தரவின் பேரில், கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா, முறையான அனுமதியின்றி இயங்கி வந்த கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைக்கு சீல் வைத்தார்.
அப்போது, கோவில்பட்டி வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம், தனி வட்டாட்சியர் (தூத்துக்குடி மாவட்ட கேபிள் டி.வி) ரமேஷ், வருவாய் ஆய்வாளர் அப்பனராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுபோல, பசுவந்தனையில் முறையான அனுமதியின்றி இயங்கி வந்த கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைக்கு ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நம்பிராயர் சீல் வைத்தார். அப்போது தனி வட்டாட்சியர் ரமேஷ் உடனிருந்தார்.