கயத்தாறு அருகே காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்றதாக, வேன் ஓட்டுநர் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதம் அலி கயத்தாறு - புதுக்கோட்டை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது கைலாசபுரம் சாலையின் குறுக்கே செல்லும் ஓடைப்பாலம் அருகே வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டார். அதில், அனுமதியின்றி ஓடை மணல் இருப்பது தெரியவந்ததையடுத்து, வேனில் இருந்த தெற்கு சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் மாடசாமியிடம்(30) உதவி ஆய்வாளர் அதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வேன், திடீரென புறப்பட்டுச் சென்றதாம். அதை பின்தொடர்ந்து சென்ற உதவி ஆய்வாளர் ஆதம் அலி மீது வேனை மோதச் செய்ய முயன்றனராம். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, மாடசாமி, வேன் ஓட்டுநர் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.