எட்டயபுரம் பகுதியில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் தொடர்பாக எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாட்சியர் பாக்யலட்சுமி தலைமை வகித்தார். மதுபானக்கடை திறப்பதை கைவிட வலியுறுத்தி மார்ச் 30ஆம் தேதிக்குள் அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில், கலால் வட்டாட்சியர் முத்துராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநிலக் குழு உறுப்பினர் அ. கஸ்தூரி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் நல்லையா, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் முனியராஜ், ஹரி, பரஞ்ஜோதி, காளீஸ்வரி, மஞ்சு, ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.