பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கடந்த ஆண்டைப் போலவே தற்போதும் 5ஆவது இடத்தை பிடித்து தூத்துக்குடி மாவட்டம் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 294 பள்ளிகளைச் சேர்ந்த 12,225 மாணவர்கள், 12,849 மாணவிகள் என 25,9074 பேர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதினர். இதில், 11,712 மாணவர்களும், 12,649 மாணவிகளுமாக மொத்தம் 24,361 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.16 சதவீத தேர்ச்சியாகும்.
இதன் மூலம் மாநில அளவில் விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக 5ஆவது இடத்தை தூத்துக்குடி மாவட்டம் பெற்றுள்ளது. இம்மாவட்டம் கடந்தாண்டு 96.93 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று 5ஆவது இடத்தையே பெற்றிருந்தது. 2015ஆம் ஆண்டு 96.74 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் 7 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.
தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 7,683 மாணவர்கள், 8,192 மாணவிகள் என 15,875 பேர் தேர்வு எழுதிய நிலையில், 7,398 மாணவர்களும், 8,103 மாணவிகளுமாக மொத்தம் 15,501 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 97.64 சதவீத தேர்ச்சி ஆகும்.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 4,542 மாணவர்களும், 4,657 மாணவிகளுமாக மொத்தம் 9,199 பேர் தேர்வு எழுதினர். இதில், 4,314 மாணவர்களும், 4,546 மாணவிகளுமாக மொத்தம் 8,860 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 96.31 சதவீத தேர்ச்சி ஆகும்.