கோவில்பட்டி அரசு மருத்துவமனை வெளிநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் வருகை தாமதமானதால் நோயாளிகளும், அரசியல் கட்சியினரும் மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இம்மருத்துவமனையில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையும் வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை நேரமாகும். இங்கு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி வரை மருத்துவர்கள் வரவில்லையாம். இதைக் கண்டித்து வெளிநோயாளிகள், காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர் சேகர், இந்து மகா சபா மாவட்டத் தலைவர் பரமசிவன், புதிய தமிழகம் கட்சி நகரச் செயலர் சாக்குப்பாண்டியன் ஆகியோர் மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி மருத்துவமனையில் 40 மருத்துவர் பணியிடங்களில் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. வெள்ளிக்கிழமை, 14 மருத்துவர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். 12 மருத்துவர்கள் விடுமுறையில் உள்ளனர். ஒரு மருத்துவர் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்டிருந்தார். 3 மருத்துவர்கள் வியாழக்கிழமை இரவு நேரப் பணியில் இருந்ததையடுத்து அவர்கள் ஓய்வில் இருந்தனர்.
இந்நிலையில், 14 மருத்துவர்கள் மருத்துவமனையில் இருந்தும் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதப்படுத்தியதால் சிரமம் ஏற்படுவதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.