மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு: மகளிர் குழுக்களுக்குப் பயிற்சி
சாத்தான்குளம், திருச்செந்தூர் வட்டாரங்களில் மகளிர் குழுக்களுக்கு மண்ணில்லா பசுந்தீவன மக்காச்சோள வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை கருதி சாத்தான்குளம் வட்டாரம் உசரத்துகுடியிருப்பு, படுக்கப்பத்த்தில் அம்மா பண்ணை மகளிர் குழுக்களுக்கு ஹைட்ரோபோனிக் என்னும் மண்ணில்லா சாகுபடி முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
சாத்தான்குளம் வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) நெடுஞ்செழியன் தலைமைவகித்து தொடங்கிவைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜலட்சுமி வரவேற்றார். பயிற்சியில் பங்கேற்ற 9 பயனாளிகளுக்கு உபகரணங்கள், 3 கிலோ மக்காச்சோள விதை வழங்கப்பட்டன. இதில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முத்துமாலை, முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர்:இந்த வட்டாரத்தில் நத்தகுளம் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சியில் தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் பாரதி, வேளாண் அலுவலர்கள் ராமலட்சுமி, திருச்செல்வன், உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வபிரபு, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மாரியப்பன், ராகுல்மணி ஆகியோர் பங்கேற்று செயல்விளக்கமளித்தனர். மேலும் தகவல்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என திருச்செந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் தமிழ்மலர் தெரிவித்துள்ளார்.