ஆறுமுகனேரி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இத் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து திங்கள்கிழமை காலை அம்மன் தவசு மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்மனுக்கு காட்சி அளித்து, தோள் மாலை மாற்றுதல் நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்மன் சேர்க்கை தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் கதிர் குளிப்பு அபிஷேகமும், திருநாண் பூட்டுதலும் நடைபெற்றன. திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமி, அம்மன் பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.
இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியையும் அம்மனையும் வழிபட்டனர்.