சாத்தான்குளம் அருகே தனியார் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கருவேலம்பாடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகள் மகேஸ்வரி (25). சாத்தான்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 7 ஆம் தேதி பன்னம்பாறை விலக்கில் ஊருக்கு செல்ல நின்றபோது பைக்கில் வந்த 3 பேர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். நடத்தினார். இதில், திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சு. இசக்கிப்பாண்டி (19) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் சு. ராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்ற போது, சங்கரன்குடியிருப்பு விலக்கில் பதுங்கி இருந்த இருவரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில், நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த வா. சுடலைக்கண் (21), சு. மணிகண்டன் என்பதும், ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க நகையை மீட்டனர்.