விளாத்திகுளம் வைப்பாற்று படுகைகளில் மணல் அள்ள அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும், சட்ட விரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும், பாஜக சார்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு பாஜக ஒன்றிய பொதுச்செயலர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், விளாத்திகுளம் வட்டம் சித்தவநாயக்கன்பட்டி கிராம எல்கையில் உள்ள வைப்பாற்று படுகையில் வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் துணையோடு பட்டா நிலங்களில் உள்ள மணல் அள்ள அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யவேண்டும்.
இதனால் 20 கிராம மக்களின் விவசாயமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கும் நிலை உருவாகும் என்பதால் வைப்பாற்றில் மணல் அள்ள அனுமதி அளிக்கக் கூடாது. மணல் கொள்ளைக்கு துணைபோகும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதில், பாஜக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் சரவணகிருஷ்ணன், சேதுராஜ், சக்திகுமார், பால்ராஜ், ராம்கி, ஆதிசிவன், சங்கரசுப்பு, பார்த்திபன், கண்ணன், முருகன் மற்றும் சித்தவநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் கலந்துகொண்டனர்.