கயத்தாறு அருகே தீக்காயமடைந்த பெண் வியாழக்கிழமை அதிகாலை இறந்தார்.
கயத்தாறையடுத்த அய்யனார்ஊத்து பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ் மகன் அப்துல்ரகுமான்(36). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி பஷிராபானு(32). இவர் இம்மாதம் 15ஆம் தேதி வீட்டில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்றவைக்கும் போது இவரது சேலையில் தீப்பிடித்து காயமடைந்தார். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு வியாழக்கிழமை அதிகாலை இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விவசாயி தற்கொலை: கயத்தாறையடுத்த ஆத்திகுளம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராஜ்குமார்(31). விவசாயியான இவர், பலரிடம் கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை காலை தோட்டத்திற்கு செல்வதாகக் கூறிச் சென்ற இவர், அங்கு விஷமருந்தினாராம். தகவல் தெரிந்தவுடன் அவரது சகோதரர் துரைப்பாண்டி மற்றும் உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று ராஜ்குமாரை மீட்டு கயத்தாறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.
இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீஸார் சடலத்தை கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.