ஸ்ரீவைகுண்டம் அருகே விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள ஆபத்தான வளைவு சாலையின் இருபுறமும் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து பத்மநாபமங்கலம் செல்லும் வழியில் கொங்கராயகுறிச்சி செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. இப்பகுதியில் சாலையின் இருபுறமும் சாலை உயரமாகவும் கீழ் பகுதியில் சுமார் 20 அடிக்கும் மேலான பள்ளமும் உள்ளது. வளைந்து செல்லும் சாலையின் இருபுறமும் பள்ளம் இருப்பதாலும், குறுகிய சாலையாக இருப்பதாலும் அடிக்கடி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இச்சாலை வழியாக பத்மநாபமங்கலத்தில் உள்ள குமரகுருபரர் சுவாமிகள் கல்லூரிக்கு செல்லும் பேருந்து மற்றும் வாகனங்கள், கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி வழியாக வல்லநாடு வரை செல்லும் வாகனங்கள், கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, மணக்கரை வழியாக செல்லும் வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த ஆபத்தான சாலையை கடந்து செல்கின்றன. இந்நிலையில், அபத்தான வளைவு சாலையின் இருபுறமும் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மேற்கு ஒன்றிய திமுக செயலர் வைகுண்டபாண்டியன் கூறியது: , ஸ்ரீவைகுண்டத்திலிலிருந்து கொங்கராயகுறிச்சிக்கு செல்லும் சாலையின் பிரிவில் இருந்து பத்மநாபமங்கலம் செல்லும் சாலையில் அடிக்கடி விபத்தை ஏற்படுவதால் சாலையின் இருபுறமும் தடுப்புகம்பி அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் தடுப்புகம்பி அமைக்கப்படவில்லை எனில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.