அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னையில் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் உலக அறிவியல் திருவிழா நடைபெற உள்ள நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலையம் அப்துல்கலாம் யாத்ராங்கம் என்ற பெயரில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கல்லூரிகளில் நடத்தி வருகின்றன.
இதையொட்டி, காமராஜ் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி கனநீர் ஆலை அதிகாரி நீமா தலமை வகித்தார். கல்லூரி முதல்வர் து. நாகராஜன் முன்னிலை வகித்தார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சேர்ந்த லட்சுமி நரசிம்மன், விஞ்ஞானிகள் ஜலஜா மதன்மோகன், விஜயகோபால், வெங்கடேசன், குமரேசன் ஆகியோர் மாணவர்களிடையே பல்வேறு பரிசோதனைகளை செய்து காண்பித்து விளக்கமளித்தனர். தொடர்ந்து அணுசக்தி துறை தொடர்பான கண்காட்சியை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
விழாவையொட்டி நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளி மாணவர்கள் ஆகாஷ் விஜய் முதலிடமும், அதே பள்ளி மாணவர் ராகுல் மற்றும் சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி மாணவர் நித்தீஷ்குமார் இரண்டாமிடமும் பிடித்தனர்.