தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நிகழ்ந்த திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய 52 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன் அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையில், பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 12 இருசக்கர வாகனங்களும், ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்த முருகன் (38), எம். சவேரியார் புரத்தைச் சேர்ந்த அய்யனார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குலசேகரன்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்ற தசரா விழாவின் போது பக்தர்களிடம் 44 பவுன் நகைகளை திருடியதாக தஞ்சாவூரைச் சேர்ந்த சுகுணா (37) கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 44 பவுன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் இரண்டு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 8 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இதையடுத்து, குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்து சிறப்பாக பணியாற்றியதற்காக திருச்செந்தூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் பிச்சையா, குலசேகரன்பட்டினம் ஆய்வாளர் அஜிகுமார், தாளமுத்துநகர் ஆய்வாளர் வனிதா ராணி, தனிப்படை உதவி ஆய்வாளர் ஷியாம் சுந்தர், இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய திருநெல்வேலி மாநகரத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சண்முகவேல் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.