தூத்துக்குடி துறைமுகம் அருகே சரக்கு பெட்டக லாரி மீது மின்சாரம் பாய்ந்ததில் லாரி ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மதுரை சாலை பகுதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (61). இவர், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து வியாழக்கிழமை காலையில் ஒரு சரக்கு பெட்டக லாரியில் சரக்குகளை ஏற்றிகொண்டு துறைமுக புறவழிச் சாலையில் உள்ள தனியார் சரக்கு பெட்டக கிடங்குக்கு சென்றார்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அருகே சென்றபோது லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினாராம். அப்போது, லாரி நிறுத்திய இடத்தின் மேலே சென்று கொண்டிருந்த உயர்அழுத்த மின்கம்பி வழியாக லாரிக்குள் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், லூர்துசாமியின் உடலில் மின்சாரம் பாய்ந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மேலும், லாரியின் டயர் பகுதியில் தீப்பற்றியதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயை அணைத்து லாரியை வேறு இடத்துக்கு கொண்டுசென்றனர்.
இந்த விபத்து குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.