கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார்.
கோவில்பட்டியை அடுத்த கரிசல்குளத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் ராமகிருஷ்ணன் (40). புதன்கிழமை கோவில்பட்டிக்குச் சென்ற அவர், மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினாராம். பசுவந்தனை சாலை கரிசல்குளம் அருகேயுள்ள மாவு மில் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார். இதுகுறித்து கொப்பம்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.