நாமக்கல்லிலில் வேலை பார்த்து வந்த சாத்தான்குளம் இளைஞர் மாயமாகி ஒரு மாதமாகியும், அவரது நிலை தெரியாததால், அவரது தாய் நீதிமன்றத்தில் முறையிட்டதன்பேரில் சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நகனை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. விவசாயி. இவரது மனைவி சுந்தரி (40). இவர்களது மகன் செல்வராஜ் (21). அதே கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் நாமக்கல் காளப்பன்நாயக்கன் பட்டியில் நடத்தி வரும் கடையில் கடந்த 2 மாதமாக வேலை பார்த்து வந்தாராம். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி செல்வராஜ் மாயமானதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லையாம். மாயமாகி ஒரு மாதமான நிலையில் அவரது நிலை என்ன என்பது தெரியாததால், அவரது தாய் சுந்தரி, மகனை தேடி கண்டுபிடிக்க உதவுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் மாயமான செல்வராஜை கண்டுபிடிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.