தூத்துக்குடி லூசியா மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி சனிக்கிழமை லூசியா இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 52 மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு சுய அறிமுகம் செய்தனர். இவர்களில் 4 ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்பட்டது. 3 ஜோடிகள் தங்கள் துணையை தேர்வு செய்து கொண்டனர். இந்த 7 ஜோடிகளுக்கும் டிச.13ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
அன்றையதினம் மணமக்களுக்கு பட்டுப்புடவை, பட்டு வேட்டி, ஜவுளிகள், தாலி, கட்டில், பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, டி.வி. மற்றும் ஒரு மாதத்துக்கு தேவையான சமையல் பொருள்கள்வரை அனைத்துமே லூசியா மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து லூசியா மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் லூசியா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியின் தலைமையாசிரியர் பெர்க்மான்ஸ் கூறியது: புனித லூசியாவின் திருநாள் மற்றும் சங்கத்தின் ஆண்டு விழா ஆண்டுதோறும் டிச. 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அந்த நாளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி சங்கம் சார்பில் திருமணம் நடத்தி வைக்கத் தொடங்கினோம். இதுவரை 65 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.