தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் அக்டோபர் இறுதிக்குள் கிடைக்கும் என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.
தூத்துக்குடியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நான்காவது பைப் லைன் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
கடந்த தேர்தலின் போது எம்.ஜி.ஆ.ரின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 22 ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் அக்டோபர் மாத இறுதிக்குள் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன், மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பேச்சாளர்கள் சின்னதம்பி, அறிவழகன், அம்புஜம், கிருபாகரன், மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலர் யு.எஸ். சேகர், முன்னாள் வாரியத் தலைவர் அமிர்தகணேசன், மேற்கு பகுதிச் செயலர் ஏ. முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.