அங்கன்வாடி பணி நியமனத்தில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்தும், பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரியும் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பகத்சிங் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். தேவி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் பணி நியமனத்தில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்தும், பணி நியமன கலந்தாய்வை உடனடியாக மீண்டும் நடத்த வலியுறுத்தியும், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு பணி நியமனத்தில் முறையாக முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.
விவசாய சங்க மாவட்டத் தலைவர் சீத்தாராமன், உறுப்பினர்கள் பாண்டியராஜன், சுந்தரி, கணேசன், ரமேஷ்கண்ணா, சிங்காரவேலு, கொம்பையா, கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.