கோவில்பட்டியில் கல்லூரி மாணவர் சுமார் 40 நிமிடம் சிரசாசனம் செய்து கின்னஸ் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார்.
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை முயற்சியில், அக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு பிரிவில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் மாரிக்கண்ணன் பங்கேற்றார். கல்லூரி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 40 நிமிடம் சிரசாசனம் செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்கச் செயலர் எஸ்.ஆர். ஜெயபாலன் தலைமை வகித்தார். கல்லூரி பொருளாளர் மகேஷ், முதல்வர் சிவசுப்பிரமணியன், மதுரை காமராஜ் பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி இயக்குநர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கடம்பூர் செ. ராஜு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உலக சாதனை முயற்சியை தொடங்கிவைத்தார். பிறகு, மாணவரைப் பாராட்டி அமைச்சர் பரிசுகளை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் அச்சையா, பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், நாடார் உறவின்முறை சங்க துணைத் தலைவர் செல்வராஜ், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி மையத் தலைவர் சேது, சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லூரிச் செயலர் கண்ணன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் சந்திரன் நன்றி கூறினார்.