கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள தனியார் கணினி மையத்தில் சமூக நீதி கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் அமைப்பின் நிறுவனத் தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் கதிரேசன், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலர் மேரிஷீலா, ஆதித்தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் முத்துகுமார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவர் மாரிமுத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலர் சங்கரப்பன், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் ராஜசேகரன், அரசு ஊழியர் எஸ்.சி., எஸ்.டி. கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சின்னப்பன், மாநில செய்தித் தொடர்பாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை நீர்த்துபோகச் செய்யும் வகையில் உள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆணை கவலையளித்துள்ளது என்றும், மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் இயற்றி வன்கொடுமை சட்டத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். தமிழக அரசு இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக் கொள்ள உடனே மனு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.