வருவாய்த் துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வருவாய்த் துறை அதிகாரியை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி, கயத்தாறில் வருவாய்த் துறை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கியின் நிர்வாகக் குழு தேர்தல் அலுவலரான தூத்துக்குடி நத்தம் நிலவரித் திட்ட வட்டாட்சியர் காளிராஜை, ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் அவருடன் வந்த சிலர் அவரை அவதூறாக பேசி தாக்கி தேர்தல் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சேதப்படுத்தினார்களாம். இதைக் கண்டித்து கோவில்பட்டி வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் வெளிநடப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணைச் செயலர் உமாதேவி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த் துறை அலுலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் ஆவணங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.