சாத்தான்குளம் பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பறிமுதல் செய்தனர்.
சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில், செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் பேருராட்சி பணியாளர்கள் திங்கள்கிழமை பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் வணிக வளாக கடைகளில் சோதனை நடத்தினர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்களை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் ஓழிப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பதாதைகள் வைக்கப்பட்டன. மேலும், பிரதான சாலை, நாசரேத் சாலை, இட்டமொழி சாலை , முதலூர் ரோடு ஆகிய இடங்களில் மகாத்மா மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் தேவையற்ற பிளாஸ்டிக் பைகள் அகற்றப்பட்டன. இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ், சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், வரி வசூலர்கள் ரைமன்நாக்ஸ், கிங்ஸ்டன் ஹெர்பெட் உள்ளிட்ட பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.