தூத்துக்குடியில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மேலூர் சக்திபீடத்தில் ஆடிப்பூர பெருவிழாவையொட்டி இயற்கை சீற்றம் தணிய வேண்டி பெண்கள் 1008 கஞ்சிக் கலயம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகில் உள்ள மேலூர் ஆதிபராசக்தி சக்திபீடத்தில் ஆடிப்பூர விழா கடந்த வெள்ளிக்கிழமை கலச விளக்கு வேள்வி பூஜையுடன் தொடங்கியது. பின்னர் குருபூஜை, விநாயகர் பூஜை நடைபெற்றது. 54 சக்தி கலசங்கள், 11 ராஜராஜேஸ்வரி கலசங்கள் நவகிரகத்தில் நிறுவப்பட்டு, அருங்கோண சக்கரம் அமைக்கப்பட்டது. ஏராளமான மகளிர் கலந்து கொண்டு 1008 தமிழ் மந்திரங்கள் கூறி அர்ச்சனை செய்து வேள்வி பூஜை நடைபெற்றது. வேள்வி பூஜையை சக்திபீட தலைவர் முத்துக்குமார் தீபம் ஏற்றி தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, கேரளாவில் இயற்கை சீற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்ப வேண்டி 108 செவ்வாடை பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி சக்திபீடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வலம் வந்து வழிபட்டனர். மகளிர் அணி தலைவி சரஸ்வதி மருதநாயகம் தொடங்கி வைத்தார்.
ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கஞ்சிக் கலய ஊர்வலம் சிவன் கோயில் முன்பு இருந்து புறப்பட்டது. இயற்கை சீற்றம் தணியவும், பருவத்துக்கேற்ற மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் வளமுடன் வாழ வேண்டி சங்கல்பம் செய்து 1008 மகளிர் சக்திகள் கஞ்சிக் கலயத்தை தலையில் சுமந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சக்திபீடத்தில் உள்ள அம்பாளுக்கு கஞ்சி வார்த்தனர். நிறைவாக பக்தர்கள் தங்கள் கரங்களால் ஆதிபராசக்திக்கு பால்அபிஷேகம் செய்து வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சக்திபீட நிர்வாகிகள் கள்ளபிரான், மாரிமுத்து, ரமேஷ், சுப்பிரமணியன், காசிவிஸ்வநாதன், கமலகண்ணன், தொழிலதிபர் கே.கே.ஜி.இளங்குமரன், முன்னாள் வாரிய தலைவர் அமிர்தகணேசன், துணை ஆட்சியர் ஏரல் சங்கரன், மகளிர் அணி உமாமகேஷ்வரி, பிருந்தா, ராஜேஸ்வரி, சங்கரி, தில்லை உள்பட பலர் கலந்துகொண்டனர்.