தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 272 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் மக்களுக்கு நோய்கள் பரவுவதாகக் கூறியும், அந்த ஆலையின் விரிவாக்கத்தை கண்டித்தும் குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 6 மணிக்கு மேல் போராட்டத்துக்கு அனுமதி இல்லாத நிலையில், அனைவரும் அருகில் உள்ள பூங்கா முன் அமர்ந்து போராட்டத்தை தொடருவதாக அறிவித்தனர். இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
போராட்டக்காரர்களிடம் சார் ஆட்சியர் பிரசாந்த் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படாததால் இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் அறிவித்தனர். அப்போது, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி பெண்கள் உள்ளிட்ட 272 பேரை போலீஸார் கைது செய்தனர்.