கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 155 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
சென்னை எய்ச்சர் மோட்டார் நிறுவனத்தைச் சேர்ந்த ராயல் என்பீல்டு, டி.வி.எஸ். குழுமமான சுந்தரம் கிளைட்டான் நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட வளாக நேர்காணலில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன், மின்னியல் மற்றும் மின்னணுவியல், அமைப்பியல், இயந்திரவியல், ஆட்டோ மொபைல் மற்றும் டூல் அன்ட் டை ஆகிய துறைகளில் இறுதியாண்டு பயின்று வரும் மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த நேர்காணலில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, அருள்மிகு கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரி, பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி, சாண்டி பாலிடெக்னிக் கல்லூரி, ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி உள்பட தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை துணை மேலாளர் பிரசன்னகுமார், சுந்தரம் கிளைட்டான் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை மேலாளர் பெருமாள், சசிகுமார் ஆகியோர் கொண்ட குழுவினரால் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 79 மாணவர், மாணவிகள் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கும், 76 மாணவர்கள் சுந்தரம் கிளைட்டான் லிமிடெட் நிறுவனத்திற்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர், மாணவிகளுக்கு அந்தந்த நிறுவனத்தின் சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் ஆலோசனையின் பேரில், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குப்புசாமி, பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அதிகாரி ராஜாமணி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.