9 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 16) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (பிப்.16) நடைபெறுகிறது.
அதன்படி, தூத்துக்குடி வட்டம் குமாரகிரி, ஸ்ரீவைகுண்டம் வட்டம் பூவாணி, திருச்செந்தூர் வட்டம் செட்டியாபத்து, சாத்தான்குளம் வட்டம் கொம்பன்குளம், கோவில்பட்டி வட்டம் இனாம்மணியாச்சி, விளாத்திகுளம் வட்டம் பூசனூர், எட்டயபுரம் வட்டம் இளம்புவனம், ஓட்டப்பிடாரம் வட்டம் பரிவல்லிக்கோட்டை, கயத்தாறு வட்டம் கலப்பைபட்டி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.