எட்டயபுரம் அருகே பேரிலோவன்பட்டி கிராம வைப்பாற்றின் கரையோரம் ஆற்றுமணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீஸார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
எட்டயபுரம் வட்டத்துக்குள்பட்ட கீழ்நாட்டுக்குறிச்சி, முத்தலாபுரம், நம்பிபுரம், பேரிலோவன்பட்டி கிராம வைப்பாற்றின் கரையோரங்களில் ஆற்றுமணல் திருட்டு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமையில், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், காவல் ஆய்வாளர் ராமையா, உதவி ஆய்வாளர் சங்கர், தலைமை காவலர் பிரபு பாண்டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார், வியாழக்கிழமை வைப்பாற்று படுகையோர கிராமங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பேரிலோவன்பட்டி கிராம வைப்பாற்றின் கரையோரம் தனியார் நிலத்திலிருந்து ஆற்றுமணல் எடுத்து செல்லப்படுவதை அறிந்த போலீஸார், காவல் துணை கண்காணிப்பாளர் தர்மலிங்கம் தலைமையில் அங்கு சென்று, மணல் திருட்டில் ஈடுபட்டதாக கோவில்பட்டியைச் சேர்ந்த காசி பழனிச்செல்வம், வர்க்கீஸ் ராஜா, விருதுநகர் மாவட்டம் கஞ்சம்பட்டியை சேர்ந்த கோவில்மணி, செல்வகுமார், விளாத்திகுளம் அருகே கல்குமி கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
மேலும், மணல் திருட்டுக்கு பயன்படுத்தியதாக 2 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம், 2 பைக்குள், ஒரு கார் உள்ளிட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.