தூத்துக்குடி மாவட்டத்தில் 60 ஆயிரம் பனங்கொட்டைகள் விதைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் தொடங்கிவைத்தார்.
கடந்த காலங்களில் மண் அரிப்பை தடுப்பதற்கும், மழைநீரை அதிகப்படுத்துவதற்கும் பனைமரங்களை விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி செய்து வந்துள்ளனர். அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் 60 ஆயிரம் பனங்கொட்டைகள் ஊன்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்கமாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் ஆலங்குளம் கண்மாய், வர்த்தகரெட்டிபட்டி ஊராட்சியில் அரசன்குளம் கண்மாய் மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கீழவல்லநாடு ஊராட்சியில் இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் பனங்கொட்டைகள் ஊன்றும் பணியை ஆட்சியர் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், சார்-ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே. பிச்சை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முத்துஎழில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இசக்கியப்பன், சிவராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.