தூத்துக்குடி வஉசி துறைமுகம் சரக்குப் பெட்டகங்கள் கையாளுவதில் புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ஐ. ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்தியாவின் பொருளாதார கேந்திரமாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி வஉ சிதம்பரனார் துறைமுகம் கடந்த 7 ஆம் தேதி 6,43,720 சரக்குப் பெட்டகங்களை கையாண்டு, கடந்த நிதியாண்டில் கையாண்ட அளவான 6,42,103 சரக்குப் பெட்டகங்கள் என்ற அளவை விஞ்சி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை நிகழ் நிதியாண்டில் 24 நாள்களுக்கு முன்பாகவே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வஉசி துறைமுகம் மார்ச் 11 ஆம் தேதி வரை 6,52,168 சரக்குப் பெட்டகங்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டு கையாண்ட சரக்குப் பெட்டகங்களை ஒப்பிடுகையில், துறைமுகம் தற்போது 8.63 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவிப்பதுடன், அனைவரும் இணைந்து வரும் காலங்களில் இதுபோன்ற பல சாதனைகளை தொடர்ந்து புரியவேண்டும்.