தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர், முக்காணி ஆகிய பகுதிகளில் தாமிவருணி மஹா புஷ்கர விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரவருரணி மஹா புஷ்கர விழா, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், தூத்துக்குடியில் முறப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, முக்காணி அகஸ்திய தீர்த்தம், சங்கமேஸ்வர தீர்த்தம், ஆத்தூர் சோமதீர்த்தம், சேர்ந்தபூமங்கலம் சண்டிகா தீர்த்தம், சங்கராஜ தீர்த்தம், உமரிக்காடு அக்னிதீர்த்தம், சேதுக்குவாய்த்தான் வஸ்து தீர்த்தம், சொக்கப்பழங்கரை கங்கை தீர்த்தம் ஆகிய தீர்த்த கட்டங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி ஹோமத்துடன் புஷ்கர விழா தொடங்கியது.
கோ-பூஜை, ருத்ர ஜெபம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம ஜெபம் நடைபெற்றன. கலசங்களில் உள்ள புனிதநீர் தாமிரவருணி நதியில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நதியில் புனித நீராடி வழிபட்டனர்.
இதில், சாகுபுரம் தாரங்கதாரா ரசாயன தொழிற்சாலையின் துணைத் தலைவர் ஜெயக்குமார், சத்யசாய் சேவை அறக்கட்டளைகளின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.அறுமுகம், இணை ஒருங்கிணைப்பாளர் சுந்தர் ஆகியோர் புனித நீராடினர். திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திபு தலைமையில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.