கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாண்டவர்மங்கலம் மற்றும் வானரமுட்டியில் அம்மா பூங்கா, உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் ரூ. 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சிக் கூடம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வானரமுட்டி ஊராட்சியில் ரூ. 20 லட்சம் செலவில் அம்மா பூங்கா, ரூ. 10 லட்சம் செலவில் அம்மா உடற்பயிற்சிக் கூடம், ரூ. 15 லட்சம் செலவில் கிராம ஊராட்சி அலுவலகம் போன்றவை கட்டப்பட்டது.
இவற்றின் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலருமான சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு திறந்து வைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கணபதி, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் லிங்கராஜ், பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், முத்துகுமார், முருகானந்தம், கிரி, உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், தமிழ்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், அதிமுக மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், நிலவள வங்கித் தலைவர் ரமேஷ், துறையூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கணேஷ்பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் அன்புராஜ், வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.