தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரமைப்பின் வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். திருவேங்கடம் வணிகர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் ராஜதுரை, செயலர் நெல்லையப்பன், சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வம், மாதாங்கோவில் தெரு வணிகர் சங்கத் தலைவர் செண்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் வணிகர் விரோதப் போக்கை கண்டித்து இம்மாதம் 23ஆம் தேதி கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்றும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து வணிகர்களும் கலந்துகொண்டு எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க ஒத்துழைக்கவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், வானரமுட்டி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆறுமுகம், கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தி, சிறு உணவு உற்பத்தி மற்றும் விற்பனையாளர் நலச் சங்கத் தலைவர் முத்துராஜா, பொருளாளர் கண்ணன், பேரமைப்பின் மாநில இணைச் செயலர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.