தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவழங்குவோர் அவர்கள் குறித்த உரிய தகவல்களை வைத்திருக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்களை பயன்படுத்துகின்ற அனைத்து நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள், அந்த தொழிலாளர்களுக்கு, அவர்களது பாஸ்பேர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டி, அவர்களைப்பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பாஸ்புத்தகம் வழங்கி இருக்கவேண்டும்.
மேலும், அந்நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் அவர்களுக்கென தனியாக பதிவேடுகள் பராமரிக்கவேண்டும். அதில் அவ்வாறு இடம் பெயர்ந்துள்ள வெளிமாநில தொழிலாளர்களின் பெயர், உறவினர் பெயர், தொலைபேசி எண், செல்லிடப்பேசி எண், முழு முகவரி, அவர்களது பணியின் தன்மை, அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், அவர்களது பணி நேரம் போன்ற முழுமையான தகவல்களை அந்தப் பதிவேட்டில் பதிவு செய்திருக்கவேண்டும்.
இவைதவிர, வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களின் புகைப்படமும் வைத்திருக்கவேண்டும். அவற்றை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள், அவ்வாறு செய்யத் தவறியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெளிமாநிலத் தொழிலாளர்களை பணிக்கு வைத்துள்ள அனைத்து தொழில் துறையினர், அமைப்பு சாரா துறையினர் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.