தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மாணவரின் தொல்லை காரணமாக 3-ம் ஆண்டு மாணவி கல்லூரி மாடியில் இருந்து குதித்து திங்கள்கிழமை மாலை தற்கொலைக்கு முயன்றார். இதற்கு காரணமான அந்த கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளையைச் சேர்ந்தவர் மு. ரவிக்குமார் (19). இவர் சாத்தான்குளம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதே கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் ஒரு மாணவியை ரவிக்குமார் ஒருதலையாக காதலித்தாராம். தனது காதலை அந்த மாணவியிடம் தெரிவித்து, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்தார்.
என்றாலும், ரவிக்குமார் அந்த மாணவியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்த மாணவியை ரவிக்குமார் காதலிக்க வலியுறுத்தி கிண்டல் செய்தாராம்.
இதனால், மனஉளைச்சல் அடைந்த மாணவி திங்கள்கிழமை மாலை கல்லூரி முடிந்தபிறகு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. இதில், காயமுற்ற அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வழக்குப் பதிந்து மாணவர் ரவிக்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தார்.