கதிராமங்கலத்தில் எப்போதும்போல் அமைதி நிலவி வளம் கொழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆடி கடைசி வெள்ளிக்கிழமை நாளில் 800-க்கும் மேற்பட்டோர் வனதுர்க்கை அம்மனுக்கு பால் குடம் எடுத்து பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். இதற்காக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை 31 வது நாளாக அய்யனார் கோயிலில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பொதுமக்கள் காவிரி ஆற்றிலிருந்து பால் குடம் எடுத்து வந்து பிரசித்தி பெற்ற கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தும், எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றியும் வழிபட்டனர். அப்போது, கதிராமங்கலத்தில் எப்போதும்போல் அமைதி நிலவி மக்கள் செழிப்புடனும், வளம் கொழித்து விவசாயம் பெருக வேண்டும் என வேண்டி வழிபட்டனர்.