அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 20 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக கிராம முக்கியஸ்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்ததை தொடர்ந்து, வாடிவாசலிருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 400 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க 160 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது வாடிவாசலில் இருந்து சீறிவந்த காளைகள் முட்டியதில் லால்குடி சுந்தர்(27), சமயபுரம் சுபாஷ்(25), திருமானூர் சிவக்குமார்(35), கல்லக்குடி சுந்தர்ராஜ்(33) உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்த இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்கள்,சில்வர் பாத்திரங்கள்,கட்டில்,சேர்,வேட்டி,சேலை உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.