அரியலூர் மாவட்டம், க.பரதூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 45 பேர் காயமடைந்தனரர்.
முன்னதாக கிராம முக்கியஸ்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்ததை தொடர்ந்து, ஊர் நடுவே அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
தொடர்ந்து திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 400 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க 200 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது, காளைகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த மேலப்பழூர் சேகர்(45), சாத்தமங்கலம் விக்கி (18), கலியன்(48), மால்வாய் ஜெயபாபு (40) ஆகியோர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்களுக்கு திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், கட்டில், சேர், வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.