அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி திங்கள்கிழமை கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுத்தமல்லி கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது.
இக்கடை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் இக்கடையை அகற்ற கோரி போதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடை தொடர்ந்து அப்பகுதியில் செயல்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திங்கள்கிழமை அரியலூர் தா.பழூர் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த உடையார்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அதிகாரிகளிடம் பேசி கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.