பெரம்பலூரில், திங்கள்கிழமை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 411 மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை
உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்ற வேண்டும் என்று, அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடமிருந்து 411 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பா. பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிரீதர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் லோ. பாலன், மகளிர் திட்ட அலுவலர் கு. செல்வராசு உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அரியலூரில்...........
அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 481 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு ஆட்சியர் க.லட்சுமிபிரியா தலைமை வகித்தார். ஆட்சியர் பொறுப்பேற்றுக் கொண்ட க.லட்சுமிபிரியா பங்கேற்கும் முதல் மக்கள் குறை கேட்பு கூட்டமாகும். கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அவர், கோரிக்கை மனுக்களுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.