அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் வட்டாட்சியர்கள் அலுவலகங்களில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் 246 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.
ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர்(பொ) தலைமையில் நடைபெற்ற உடையார்பாளையம் வட்டத்துக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் இருந்து 159 மனுக்கள் பெறப்பட்டதில், 70 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. 55 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 34 மனுக்கள் தள்ளுபடியானது.
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பா.ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்ற அரியலூர் வட்டத்துக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் 259 மனுக்கள் பெறப்பட்டு, 176 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, 34 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 49 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று வருவாய் தீர்வாயம் நடைபெறும் கிராமங்கள்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜயங்கொண்டம் உள்வட்டத்துக்குள்பட்ட எரவாங்குடி,தண்டலை,கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, பிச்சனூர், வெத்தியார்வெட்டு, ஆமணக்கந்தோண்டி,உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), பெரியவளையம், ஜயங்கொண்டம்
ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 26) நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில்,பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நில அளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடித் தீர்வு காணலாம் என ஆட்சியர்(பொ)எஸ்.தனசேகரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.