அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த புதிய டிராக்டரை திருடிய மர்ம நபர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
கீழப்பழூவூர் அருகேயுள்ள ஆரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காசலம் (50), விவசாயி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய டிராக்டர் ஒன்றை வாங்கியிருந்தார். இந்த டிராக்டர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் இவர் கடந்த 23 ஆம் தேதி தனது டிராக்டரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வழக்கம்போல் இரவு தூங்கச் சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரைக் காணவில்லை. கங்காசலம் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.