அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் க.லட்சுமிபிரியா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
மருத்துவப் பரிசோதனை பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் செவிலியர்கள் கிராமங்களுக்கு வந்து மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனரா, தடுப்பூசிகள் போடப்படுகிறதா எனக் கேட்டறிந்தார்.
மேலும், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியையும் பார்வையிட்டு, நிலவேம்பு கசாயப் பவுடர் இருப்பு உள்ளதா என்றும் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் விவரங்களைக் கேட்டறிந்து, அவர்களுடைய வருகைப் பதிவேட்டினை ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, பொய்யாதநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ராயம்புரம் அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் அவர் ஆய்வு செய்தார்.